வேதாஜி பாண்டியன் இயக்கத்தில் ஆர். பாண்டியன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘இரவுப்பறவை’. கடலுார் மாவட்டத்தை சுற்றியுள்ள இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. கலைபாரதி இசையமைத்து பாடல்களை உருவாகி உள்ளா். சத்யா, நந்தினி நடித்துள்ளனர். இலங்கை தமிழர்களின் இந்திய குடியுரிமை பற்றி இந்த படத்தின் கரு பேசுகிறது. சென்னையில் நடந்த பாடல் வெளியீட்டுவிழாவில், இந்த படத்தின் கரு மற்றும் குடியுரிமை விஷயத்தில் உள்ள சிக்கல்கள், இலங்கைகளில் எத்தனை விதமான தமிழர்கள் வசிக்கிறார்கள் என விரிவாக பேசினார் வி.சி.க. தலைவர் திருமாவளவன்.
அவர் பேசுகையில் ‘‘ ஒரு முக்கியமான பிரச்னையை இயக்குனர் தொட்டு இருக்கிறார்.இப்படி சிந்தித்த இயக்குனருக்கு பாராட்டுகள். இலங்கை தமிழர்களின் அதாவது, தமிழகத்தில் வசிக்கும் ஈழத்தமிழர்களின் இரட்டை குடியுரிமை பற்றி பேசுகிறது. ஆனால், அது முடியாது என்று சட்டமே வந்துவிட்டது. ஆனால், அது தீவிரமாக்கப்படவில்லை. 1983ல் இருந்து இலங்கையில் இருந்து இங்கே வசிக்கிறார்கள். அவர்கள் ஈழத்தமிழர்கள். அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வேண்டும் என்ற கருத்தை நான் முன்பே
வைத்தேன்.
அதற்குமுன்பு இலங்கையில் வசிக்கும் தமிழர்களை பற்றி பேச வேண்டும்.இலங்கையில் வட கிழக்கு மாகாணத்தில் வாழ்பவர்கள், பூர்வீக தமிழர்கள். அவர்கள் அந்த மண்ணின் பூர்வகுடிகள். ஒரு காலத்தில் நமது இந்தியாவும், இலங்கையும் ஒரே நிலப்பரப்பாக இருந்தது. பின்னர், கடலால் அது தனித்தீவாக மாறியது. அப்போதே வசிப்பவர்கள் அந்த தமிழர்கள். அடுத்து இலங்கையில் உள்ள தேயிலை தோட்டத்தில் பணியாற்ற 10 லட்சம் தமிழர்கள் இங்கே இருந்து இலங்கை சென்றார்கள்.அவர்கள் மலையகத்தில் வசிக்கிறார்கள். அவர்களை மலையகத்தமிழர்கள் என்பார்கள். அவர்கள் இந்திய வம்சாவழி தமிழர்கள். அவர்களில் பலர் தமிழகம் வந்துவிட்டார்கள். மற்றவர்கள் அங்கே வசித்தார்கள். அவர்களுக்கும் இப்போது அங்கே குடியுரிமை கிடைத்துவிட்டது. இன்னொருவகை தமிழர்கள் கொழும்பு சுற்றியுள்ள பகுதிகளில் வியாபாரம் செய்பவர்கள், கடை வைத்து இருப்பவர்கள். அவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் , வியாபார நிமித்தம் அங்கே இருப்பவர்கள் அல்லது சென்று வருபவர்கள்
தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் முகாமில், வெளியிடத்தில் வசிக்கிறார்கள். அவர்கள் கஷ்டப்படுகிறார்கள். நிறைய சட்ட சிக்கல்களை சந்திக்கிறார்கள்.அவர்கள் வருங்காலத்தில் இலங்கை செல்லலாம். ஆனால், இப்போது இந்தியாவில் வசிப்பதால் இரட்டை குடியுரிமை கேட்கிறோம். அது நடக்கவில்லை. அது பற்றி இந்த படம் பேசுகிறது
ராமநாதபுரத்தை சேர்ந்த இந்த இயக்குனர் கடலுாரை போற்றும்வகையில் நல்லதொரு பாடலை கொடுத்து இருக்கிறார். அந்த பாடலை கலைபாரதி அருமையாக கொடுத்து இருக்கிறார். வேதாஜி என்ற பெயரை கெட்டப்போது நெருடல் வந்தது. ஆனால், அவர் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக படம் எடுத்து இருக்கிறார். இந்த குழு வெற்றி பெற வேண்டும் ’’ என்றார்
மீனாட்சிசுந்தரம்


